தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபிறகு, நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
” இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளில், தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்விற்காக பல சிறப்பு நலத் திட்டங்களை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 2007ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்த கால கட்டத்தில்தான், தூய்மைப்பணி நலவாரியம் ஏற்படுத்தப்பட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
இன்று காலையில்கூட, அரசு ஊழியர்கள் பணியில் இருக்கின்றபோது மரணம் எய்தினால் / இயற்கை எய்தினால், அவர்களுக்கான அந்த விபத்து காப்பீட்டுத் தொகையாக வழங்கக்கூடிய தொகை வருவாய் கோட்டாட்சியர் ஒருவருக்கும் அதேசமயம் அங்கன்வாடி பணியாளர் ஒருவருடைய குடும்பத்திற்கும் சமமாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில்தான் தூய்மைப் பணியாளர்களுக்கான குறிப்பிட்ட சிறப்புத் திட்டங்களை அமைச்சரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
அறிவிப்பு 1 - தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைக் கையாளும்போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
அறிவிப்பு 2 – தற்போது தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலமாக, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களின் எதில்கால நலன்களையும், வாழ்வாதரத்தையும் முழுமையாக உறுதி செய்யக்கூடிய வகையில், இந்த நிதியுதவியுடன் கூடுதலாக இந்தப் பணியாளர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால், பணியின் போது இறக்க நேரிடும் தூய்மைப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.
அறிவிப்பு 3 - தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமூகப் பொருளாதார நிலையினை உயர்த்திட சுய தொழில் தொடங்கும்போது, அத்தொழில் திட்ட மதிப்பீட்டில், 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். மேலும், இந்த கடனுதவியைப் பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு 6 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அறிவிப்பு 4 - தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவர்களுக்கு உயர் கட்டணச் சலுகைகள் மட்டுமின்றி, விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணங்களுக்கான உதவித் தொகையை வழங்கிடும் வகையில், “புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்” ஒன்று செயல்படுத்தப்படும்.
அறிவிப்பு 5 – நகர்ப்புறங்களில், சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உதவியோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள், தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30,000 குடியிருப்புக்கள் கட்டித் தரப்படும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் இந்த வீட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.
அறிவிப்பு 6 - தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
முதலமைச்சர் அறிவித்திருக்கக்கூடிய இந்தத் திட்டங்களின் பின்னணியில் அரசு உங்கள் மீது கொண்டிருக்கக்கூடிய அக்கறையை மனதில் வைத்து பொதுமக்களுடைய நலனை கருதி, அதைப்போல உங்களுடைய மற்ற கோரிக்கைகளை எல்லாம் மனதில் வைத்து நீங்கள் உங்களுடைய வேலைநிறுத்தத்தை விடுத்து பணிகளுக்குத் திரும்பவேண்டும் என அரசுசார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.