கன்னட எழுத்தாளர் தேவநூர மகாதேவாவுக்கு தமிழ்நாட்டு அரசு வைக்கம் விருது அறிவித்துள்ளது.
நாளை கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விருதை வழங்குகிறார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.” என்று அறிவித்தார்.
அதற்கிணங்க, 2024ஆம் ஆண்டிற்கான ’வைக்கம் விருது’ கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மகாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் சமூக ஆர்வலரும் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு, அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ,சாகித்ய அகாதெமி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்.
வைக்கம் விருதுடன் ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ், தங்க முலாம் பூசிய பதக்கம் வழங்கப்படும்.