தி.க. தலைவர் கி.வீரமணி
தி.க. தலைவர் கி.வீரமணி

நேற்று எங்கே போனார் தமிழிசை?- கி.வீரமணி கேட்கிறார்!

இன்றைக்கு ஊடகங்களிடம் தேர்தல் விதி மீறல் எனப் பேசும் தமிழிசை போன்றவர்கள் நேற்று எங்கே போனார்கள் என தி.க. தலைவர் கி.வீரமணி கேட்டுள்ளார். 

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதைக் கேட்டுள்ள அவர், தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் இன்று (20-4-2024) காலை புதுப்புது வாதங்களைக் கூறி, ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார். 

“‘‘வெள்ளிக்கிழமை தேர்தல் வைக்காமல், புதன்கிழமை வைத்திருக்க’’வேண்டுமாம்; விடுமுறையில் மக்கள் ஊருக்குப் போய்விட்டார்களாம். அது யாருடைய பொறுப்பு? நிறையப் பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளனவாம்! பா.ஜ.க. என்ன செய்துகொண்டிருந்தது?
‘‘தி.மு.க.வினர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து பா.ஜ.க. முகவரை வெளியேற்றினார்கள்’’ என்கிறார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.
அப்படி ஒரு புரளியை திடீரென்று இன்று (20-4-2024) காலை வந்து சொல்கிறார்களே, நேற்று (19-4-2024) ஏன் இதுகுறித்துப் பேசவில்லை? ஊடகங்கள் எங்கே போயினவாம்?
சொல்லப்போனால், வாக்குச்சாவடியில் பிரச்சினை செய்ததாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உதவியாளர் உள்பட ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை!


‘‘நூறு சதவிகித வாக்குப் பதிவுக்குப் பல கோடி ரூபாய் விளம்பரம் செய்தும் பயனில்லை’’ - பலன் இல்லையாம் (தமிழிசை).
குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, உங்களுக்கு ஒரே கேள்வி!

தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின் கீழ்? ஒன்றிய அரசின்கீழா? அல்லது மாநில அரசின் கீழ் இயங்குகிறதா? இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது யார்? முன்னரே நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களிடம் இதுபற்றி பகிரங்கமாகப் பேசினீர்களா?” என்றும் வீரமணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com