பழுதான கொடிமரத்தை மாற்ற அறநிலையத்துறை முடிவு… எதிர்க்கும் தீட்சிதர்கள்!

பழுதான கொடிமரத்தை மாற்ற அறநிலையத்துறை முடிவு… எதிர்க்கும் தீட்சிதர்கள்!
Published on

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடிமரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் முடிவு செய்தார்.

இதுபற்றி அறிந்ததும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு, கோவில் நிர்வாகிகளிடம் இக்கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இங்குள்ள கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் பட்டாச்சாரியர்கள், தீட்சிதர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிய கொடிமரம் மாற்ற இன்று காலை வருகை தந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன், தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர். அறநிலையத்துறை துணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவிடம், முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி தீட்சிதர்கள் கேள்வி எழுப்பினர்.

கொடி மரத்தை தற்போது உள்ளதை போல் மாற்றுவதை எதிர்க்கவில்லை, புதிதாக வளையம் போன்றவை வைப்பதை எதிர்க்கிறோம் என்று தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

கொடிமரம் தற்போது உள்ள நிலையிலேயே திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என எழுத்து மூலமாக தீட்சிதர்களுக்கு ஒப்புதல் கடிதம் அளிக்க கோவில் அறங்காவலர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com