சென்னையில் மெட்ரோ இரயில் வண்டிகள், நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் பரவலாக பொது இடங்களில் கண்டபடி பாக்கு, புகையிலையை மென்று துப்புவோரால் நகரின் தூய்மையும் அழகும் கெட்டுவருகிறது. குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்களின் வருகைக்குப் பிறகு இந்தப் பிரச்னை அதிகரித்துள்ளது. போதைப் பாக்கு தடைசெய்யப்பட்ட பிறகு, புகையிலையை மெல்லும் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதை மென்று போகுமிடம் எல்லாம் துப்பியபடி செல்கின்றனர்.
ஒப்பீட்டளவில் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ இரயில் வண்டிப் பாதைகளிலும் வண்டிகளிலும் இந்தத் தூய்மைக் கேடு பரவத் தொடங்கியுள்ளது. அந்த இரயில் வண்டிகளுக்குள் உணவுப்பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்றபோதும், புகையிலையை மென்றுதுப்புவோரைக் கட்டுப்படுத்துவது சிக்கலாகி உள்ளது.
இந்த நிலையில், மெட்ரோ இரயில் நிர்வாகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ”மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களை மெட்டல் டிடெக்டர்கள் (metal detectors) மூலம் கண்டறிய முடியாததால், இது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நெரிசல் இல்லாத நேரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சீரற்ற உடல் சோதனைகளை (physical checks) மேற்கொள்ளும். நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை (Central Security Surveillance Room), விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து மெட்ரோ இரயில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றும்,
”இரயில் நிலையங்களிலும் மெட்ரோ இரயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு Metro Railways (Operation and Maintenance) Act, 2002, and Metro Railways Carriage and Ticket Rules, 2014 ஆகியவற்றின் படி அபராதம் விதிக்கப்படும்.” என்றும் கூறப்பட்டுள்ளது.
”சுத்தமான, பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை உறுதி செய்வதில் அனைத்து பயணிகளும் ஒத்துழைக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. நமது மெட்ரோஅமைப்பை புகையிலை இல்லாததாகவும், அனைவருக்கும் உகந்ததாகவும் வைத்திருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.” என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.