புயலிலும் கட்டுமானப் பணி... உயிர் ஆபத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள்!

அரசின் எச்சரிக்கையை மீறி சென்னை, அண்ணா நகர் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள்
அரசின் எச்சரிக்கையை மீறி சென்னை, அண்ணா நகர் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள்
Published on

தலைநகர் சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் புயல் காரணமாக நேற்று முதல் மழை பெய்துவருகிறது. இதில் பல இடங்களில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

தகவல்நுட்ப நிறுவனங்களில் வீட்டிலிருந்தே வேலைசெய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களை இன்று தொழிலை நிறுத்திவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களை கட்டுமானப் பணிகளைச் செய்யவைக்கும் கொடுமை அரங்கேறிவருகிறது. 

சென்னை, அண்ணா நகரை அடுத்துள்ள பாடிக்குப்பம் பகுதியில் டிவிஎஸ் லக்சுரி வில்லா எமரால்டு லக்சுரா என்ற கட்டுமானத் திட்டத்தில் புயல் மழைக்கு இடையிலும் நேற்று இரவுமுதல் இப்போதுவரை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் அரசு அதிகாரிகள் இதைத் தடுத்துநிறுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. 

இதைப் போன்ற இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இத்தகைய விதிமீறல்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என்று தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.  

அரசின் எச்சரிக்கையை மீறி சென்னை, அண்ணா நகர் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள்
அரசின் எச்சரிக்கையை மீறி சென்னை, அண்ணா நகர் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள்

முன்னதாக, நேற்று வெளியிடப்பட்ட தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கை அறிவிப்பு:

“பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே,

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.  மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Work from Home)

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (30.11.2024) வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுப் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

30.11.2024 அன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.

பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்

30.11.2024 அன்று புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.  குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. 

மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

அரசின் எச்சரிக்கையை மீறி சென்னை, அண்ணா நகர் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள்
அரசின் எச்சரிக்கையை மீறி சென்னை, அண்ணா நகர் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள்
logo
Andhimazhai
www.andhimazhai.com