
தமிழ்நாட்டில் சிறுமி முதல் மூதாட்டிவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்; முதலமைச்சரோ மகளிர் மாநாடு நடத்துகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்துகொண்டிருக்கிறது என்றும் அதைத் தலைநிமிர வைப்பதாகக் கூறும் ஸ்டாலினுக்குக் கண்டனம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய அறிக்கை ஒன்றில், இதைக் கூறியுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது :
“ சென்னை தரமணியில் வெளி மாநிலப் பெண், போதை ஆசாமிகளால் சீரழித்துக் கொல்லப்பட்டுள்ளார். கண்முன்னே மனைவி பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுத்த கணவனும் இந்தக் கொடுஞ்செயலைப் பார்த்து அந்த இரண்டு வயது குழந்தையும் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேண்டினில் பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த பெண், தி.மு.க. பிரமுகரால் சீரழிக்கப்பட்டுள்ளதோடு; அவரது நண்பர்களுக்கும் விருந்தாக்கப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது. கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசைக் கண்டு பயமில்லா நிலை இருப்பதற்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளே காரணம்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆளும் கட்சியினர் அடைக்கலம் அளிப்பதுதான், தற்போது தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி உள்ளதற்குக் காரணம் என்று அவதியுறும் மக்கள் புலம்புகிறார்கள். பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தடை இல்லாமல் போதைப் பொருட்கள் கிடைப்பதும், அவற்றைக் கொண்டுசெல்வதில் ஆளும் கட்சியினரில் சிலர் ஈடுபட்டு வருவதும், பெரும் சீரழிவுக்குக் காரணமாக உள்ளது. பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள்வரை போதையின் பிடியில் சிக்கி குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் பள்ளி மாணவிகளில் சிலர் சீருடையிலேயே மது அருந்துவது போன்ற காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாவதும், திமுக ஆட்சியின் இலட்சணத்தைப் பறை சாற்றுகிறது.
சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் மு.க ஸ்டாலினைக் கண்டித்து வீதியில் இறங்கி நாள்தோறும் போராடி வருகிறார்கள்! போராடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதில் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.
பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில் அல்லும் பகலும் 'கரப்ஷன் கமிஷன், கலக்ஷன்' என்று செயல்படும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது.” என்று எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.