
பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரச்னை செய்துவரும் கேரள அரசு அந்த மாநில வல்லுநர் கூறும் தீர்வைச் செயல்படுத்துமா என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது :
”முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகக் கேரளப் பாதுகாப்பு “பிரிகேட்” என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே, அதைப் பயன்பாட்டிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை இம்மனுவில் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒன்றிய மற்றும் தமிழ்நாட்டு அரசுகளுக்கு முன்னறிவிப்பு கொடுத்துள்ளது.
1963ஆம் ஆண்டிலிருந்து கடந்த 62 ஆண்டுக் காலத்திற்கும் மேலாகப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை முழுமையாக இடித்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கூப்பாட்டினை கேரள அரசும், அனைத்துக் கட்சிகளும் இடைவிடாது எழுப்பி வருகின்றன. 1963ஆம் ஆண்டில் கேரளத்தின் புகார்களை விசாரிப்பதற்காக ஒன்றிய நீர்வள ஆணையத்தின் இயக்குநர் பெரியாறு அணைக்கு நேரில் வந்து தமிழகம் மற்றும் கேரள தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
1978ஆம் ஆண்டில் மீண்டும் இதே புகாரைக் கேரளம் எழுப்பியபோது, ஒன்றிய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும், உயர் அதிகாரிகளும் அணையைப் பார்வையிட்டு வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும், கேரள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக 12.5கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேளை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 152அடியிலிருந்து 136அடியாகக் குறைக்கும் படியும் அறிவுரை கூறியது. அதைத் தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர் மட்டத்தைக் குறைப்பதுடன் மராமத்து பணிகளைத் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப்பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளை போட்டது. எனவே, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, அணையின் வலிமையைச் சோதிக்கும்படி ஒன்றிய அரசுக்கு ஆணையிட்டது. அந்த குழுவும் அணையை நேரிடையாக பரிசோதனை செய்து அணையை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142அடி வரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது, மேலும், இந்தப் பிரச்சனையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும், வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரியவருவதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கேரள அரசைக் கண்டித்தது.
அணையின் நீர்மட்டம் 136அடிகளாகக் குறைக்கப்பட்டதனால், 1980ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 45ஆண்டுக் காலத்திற்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாற்று நீரைக் கொண்டு 2 இலட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெற்றது. அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதின் விளைவாக 38,000 ஏக்கர் நிலம் தரிசு நிலமாக மாறியது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86,000 ஏக்கராகும். ஆற்றுப் பாசன நீரை இழந்து ஆழ்துளைக் கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53,000 ஏக்கராகும். இதன் விளைவாக தமிழக உழவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 55.80கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின் உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு 75கோடி ரூபாய்களாகும். ஆகமொத்தம் ஆண்டுக்கு 130.80கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 45 ஆண்டுகாலமாக மொத்த இழப்பு 5886 கோடி ரூபாயாகும்.
09.12.2011 அன்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மீண்டும் அணை பலவீனமாக இருப்பதாக மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் அணை உடைந்து அதன் விளைவாக ஏற்படும் உயிர்ச் சேதத்திற்கும் பொருள் சேதத்திற்கும் நாங்கள் பொறுப்பல்ல என உச்ச நீதிமன்றத்தையே மிரட்டும் அளவுக்குச் சென்றது. எனவே, உச்ச நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு பெரியாறு அணையை முழுமையாகப் பரிசோதனை செய்வதற்காக மத்திய நீர் ஆணையம், மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம், இந்திய புவியியல் அளவுத்துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம், மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலையம் போன்ற அமைப்புகளின் சேவையைப் பயன்படுத்தியும் இந்த அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் பெரியாறு அணை நீருக்குள் மூழ்கி பல்வேறு விதமான சோதனைகளை மேற்கொண்டும், நவீன சாதனங்களைப் பயன்படுத்தியும் தாங்கள் அறிந்த உண்மைகளை 05.12.2011 அன்று ஆனந்த் குழுவினரிடம் அளித்தனர். இக்குழுவின் ஆய்வு வேலைகளுக்காகத் தமிழக அரசு 1.38கோடி ரூபாய் கொடுத்துள்ளது. ஆனந்த் குழு அணை வலிமையாக இருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டு, அதை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மராமத்துப் பணியில் மீதமுள்ளவற்றை முடிக்கும் வரை 142 அடி உயரத்திற்கு நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தது. ஆனால், பேபி அணையை வலுப்படுத்தும் வேலையைச் செய்வதற்குத் தமிழகத்தை அனுமதிக்கக் கேரள அரசு கடந்த 19 ஆண்டுகாலமாக மறுத்து வருகிறது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கூப்பாடு போடும் கேரள அரசியல்வாதிகள், அணையை வலுப்படுத்த அனுமதிக்க மறுக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்குப் பிறகும் இன்றுவரை மீதமுள்ள மராமத்துப் பணிகளைச் செய்வதற்குத் தமிழகத்தை அவர்கள் அனுமதிக்கவில்லை. உச்ச நீதிமன்றமோ அல்லது இந்திய அரசோ கேரள அரசின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டிக்க முன்வரவில்லை.
தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்த நீரைத் தராமல் வஞ்சிக்கும் கேரளத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு. மாடு, கோழி, முட்டை, பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சி தேவையில் 90விழுக்காடு தமிழகத்திலிருந்து அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20சதவீதம் மின்சாரம் கேரளத்திற்கு அனுப்பப்படுகிறது.
நாள்தோறும் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு அனுமதி பெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511மி.க.மீ. நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியைக் கேரளத்திற்கு வஞ்சகமின்றி அனுப்புகிறோம். மேலும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவு பொருள்கள், கால்நடைகள் உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ அதிகமாகச் சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1700க.மீ. நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5100 மி.க.மீ. நீர் தேவைப்படுகிறது. ஆனால் இவ்வளவு நீரைப் பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் பெரியாறு அணை நீரில் நாம் கேட்பது 126மி.க.மீ. நீர் மட்டுமே. இதைவிடப் பல நூறு மடங்கு அதிகமான நீரை நம்மிடமிருந்து உறிஞ்சுக்கொள்ளும் கேரளம் நமக்கு சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரைத்தர மறுக்கிறது.
முல்லைப்பெரியாற்றில் உற்பத்தியாகும் நீர்ப் பிடிப்பு பகுதியின் மொத்த பரப்பளவு 601 ச.கி.மீ. ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர்ப் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114ச.கி.மீ. ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5இல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரில் அளவு 4867.9மி.க.மீ. ஆகும். கேரளத்தின் விவசாயத்திற்கும், தொழிலுக்கும் குடிநீருக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர்மட்டம் 152அடி வரை உயர்த்தப்பட்டால், நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126மி.க.மீ. ஆகும். அரபிக்கடலில் வீணாக் கலக்கும் நீரில் 18.34% நீரை மட்டுமே நமக்குத்தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் அதற்கும் பிடிவாதமாக மறுக்கிறது.
கேரளத்தில் பாய்ந்தோடும் பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடி ஆறு, பெரியாறு ஆகிய ஆறுகளின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருக்கும் பரப்பளவு 2588ச.கி.மீ. ஆகும். நமது நாட்டிலிருந்து 2641மி.க.மீ. நீர் பாய்ந்தோடி மேற்கண்ட ஆறுகளில் கலக்கிறது. நமது எல்லைக்குள் இருக்கும் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அணைக் கட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு நாம் செய்வதற்கு முனைந்தால் சட்டப்படி கேரளத்தால் தடுக்க முடியாது.
பெரியாறு அணை கட்டப்பட்டு 130 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தைக் கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய அணைகளான துங்கபத்திரா அணை, கிருஷ்ண சாகர் அணை மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளைத் தாண்டியவையாகும். புதிய அணை கட்டவேண்டும் எனக் கேரளம் வற்புறுத்துவதற்கு உண்மையான காரணம் பெரியாறு அணையின் உடன்பாடு 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். புதிய அணை கட்டப்பட்டால் இந்த உடன்பாடு செல்லாததாகிவிடும். புதிய அணையின் மூலம் புதிய கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு விதிக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள். புதிய அணையிலிருந்து நமக்குப் போதுமான நீரைக் கேரளம் தருமா? என்பது ஐயத்திற்கு இடமானது.
புதிய தீர்வுத் திட்டம்
இதற்கிடையில் கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பொறியாளர் ஒருவர் பெரியாறு அணைப் பிரச்சனைக்குத் தீர்வு காண ஒரு யோசனையை கூறியுள்ளார். அது வருமாறு:
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மெட்ரோ தொடர்வண்டிகளை வெற்றிகரமாக அமைத்துத் தந்து மெட்ரோ மனிதர் என அனைவராலும் போற்றப்படும் பொறியியல் அறிஞரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான இ. சிறீதரன் என்பவர், இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அரிய அறிவுரை வழங்கியுள்ளார். 28.08.24 அன்று கோழிக்கோட்டில் “பெரியாறு அணையின் அச்சமும் – எதிர்காலமும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றில் அவர் பேசும்போது, பின்வரும் திட்டத்தை தெரிவித்துள்ளார். “பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் அணையின் 100 அடி நீர் மட்டத்தில் புதிதாகக் குகைக் கால்வாய் ஒன்றினை வெட்டவேண்டும். அக்கால்வாய் 4கி.மீ. நீளமும் 6 மீ அகலமும் கொண்டதாக அமையவேண்டும். இவ்வாறு அமைத்தால் அணையில் சேரும் மிகை நீர் இக்கால்வாய் வழியாகத் தமிழகம் சென்றுவிடும். எனவே வெள்ளப் பெருக்கின் போதெல்லாம் அணைக்கு எத்தகைய ஆபத்தும் நேரிடாது” என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதற்கு மேலும் அணையின் வலிமை குறித்து ஐயம் ஏற்பட்டால், அணையை வலிமைப்படுத்தும் வகையில் கான்கிரீட் தூண்களும், சுவர்களும் எழுப்பப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த அறிவுரைக்குக் கேரள அரசியல்வாதிகள் செவிசாய்ப்பார்களா?” என்று நெடுமாறன் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.