பொங்கலன்றும் இலங்கையில் தமிழக மீனவர் 10 பேர் சிறைப்பிடிப்பு!
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இலங்கைப் படையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்றும் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கைதுசெய்துள்ளதாக அந்நாட்டுக் கடற்படை தெரிவித்துள்ளது.
பொங்கல் நாளான இன்று காலையில் யாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறையை ஒட்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தனர் என்றும் பின்னர் இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள இழுவைப் படகை இவர்கள் பயன்படுத்தியதால், அந்தப் படகும் கைப்பற்றப்பட்டது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று அங்குள்ள மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற இலங்கை அரசுக் கூட்டத்தில், இந்திய தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதாகவும் இதைத் தடுத்தாகவேண்டும் என்றும் மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசியிருந்தார்.