மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டப் பெயரை மாற்ற முயற்சி : தலைதூக்கும் சர்வாதிகாரம்!

மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டப் பெயரை மாற்ற முயற்சி : தலைதூக்கும் சர்வாதிகாரம்!
Published on

தேசத் தந்தையின் பெயரை ஒரு  திட்டத்திலிருந்து நீக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது; எந்தவொரு ஆளும் கட்சியும் தங்கள் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் திட்டங்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்ட தலைவர்களின் பெயரை மாற்றுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் வெளியிட்ட அறிக்கையில் இதைக் கூறியுள்ள அவர், “தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி, புதிய விதைகள் சட்டம் 2025, மின்சாரச் சட்டம் 2025, பொதுக் காப்பீட்டு திட்டத்தில்  100 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, அணுசக்தித் திட்டத்தில் அந்திய நிறுவனங்களை நுழைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வர பாசிச பாஜக அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை, பூஜ்ய பாபு சட்டம் என மாற்ற ஒன்றிய அரசு முடிவெடுத்திருக்கிறது. மகாத்மா காந்தி பெயர் நீக்கமும், அந்தச் சட்டத்தை மாற்றி, அதை ‘பூஜ்ய  பாபு சட்டம்’ என்று பெயரிட முடிவெடுத்திருப்பது, மகாத்மா காந்தி மீது ஒன்றிய அரசுக்கு உள்ள வெறுப்பை வெளிப்படுத்துகிறது.” என்று வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், ”இந்தச் சட்டத்தில் உள்ள ‘உத்தரவாதம்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வெறும் ‘வேலை வாய்ப்பு’ என்று மாற்றவும் ஒன்றிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டப்படியான உரிமை பயனாளிகளிடம் இருந்து பறிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.

கோடிக்கணக்கான நூறு நாள் வேலைத் திட்ட பயனாளிகளின் வயிற்றில் அடிக்கும் இந்தச் செயல் மூலம், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி செய்யும் மோடி அரசின் சர்வாதிகார போக்கை முறியடிக்க, இந்தியாவில் ஒருமித்த கருத்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக அமைப்புகளையும் தமிழ்நாடு அரசு ஒன்று திரட்ட வேண்டும்.” என்றும் த.வா.க. கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com