திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி காதுத்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கடந்த 15 நாள்களாக, தான் சிகிச்சையில் இருப்பதாக இன்று அவரே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பெரியார் உலகத்துக்காக இதுவரை 46 இலட்சம் ரூபாய் நன்கொடை திரண்டுள்ளதாகவும் இந்தப் பணிகளுக்காக இந்தக் காலகட்டத்தில் தன்னால் வேலைசெய்ய இயலாது போய்விடுமே என வருந்துவதாகவும் அவர் மனத்தாங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.
“கடந்த 15 நாள்களாகத் தொடர் மருத்துவ சிகிச்சைக்கு ஆளானேன் என்றாலும், மருத்துவமனைகளில் இருந்தபோதும், மருத்துவ ஆலோசனைப் படியும், எனது உடல் நலம் காரணமாகப் பெரியார் திடல் அன்றாட வருகை, உங்கள் அனைவரையும் வழமைபோல் சந்திப்பது, தொலைப்பேசி மூலம் உரையாடுவது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியுள்ள நிலையில், எனக்கு ஏற்பட்ட காது தொற்றுக்கான சிகிச்சை பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் டாக்டர் மோகன் காமேசுவரன் அவர்களது சீரிய சிகிச்சை நடவடிக்கைகள் மூலம் தொற்று பெரிதும் குறைந்துள்ளது என்பது நல்ல மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கக் கூடிய ஒன்றாகும்.” என்று வீரமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.