வடகிழக்குப் பருவ மழையை எதிர்நோக்கி தமிழகம் காத்திருக்கும் நிலையில், ஏற்கெனவே விளைவிக்கப்பட்ட நெல்மணிகளை மழையில் நனையவிடாமல் காக்கும்படி விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பலத்த மழை பெய்ததில் பரவலாக மழைநீர் தேங்கியது. குறிப்பாக, விளைவிக்கப்பட்டு, மூட்டைகளாக அடுக்கப்பட்ட நெல்மணிகள் அரசின் கொள்முதல் நிலையங்களில் வரிசையில் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
குமராட்சி, காட்டுமன்னார்கோயில் ஆகிய ஒன்றியங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையும்படி இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளன என்று விவசாயிகள் புகார்களைக் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமிநடராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்களை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ” என்றும்,
குறிப்பாக, ”தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவையாறு, அம்மாப்பேட்டை ஆகிய ஒன்றியங்களிலும், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மூட்டை நெல்கள் பத்து - பதினைந்து நாள்களாக கொள்முதல் செய்யப்படாமல் சாலைகளிலும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் கொட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் இந்த நெல்கள் முழுவதும் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.” என்றும் தெரிவித்துள்ளார்.
”மாநில அரசு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அனைத்து நெல் மூட்டைகளையும் விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஈரப்பதம் 17 சதம் என்பதை 20 சதமாக உயர்த்தி கொள்முதல் செய்திட வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அந்தந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருப்பதால் நெல்கொள்முதலில் பெரிய தாமதம் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசு மற்றும் தனியார் கிடங்குகளிலும், தேவையேற்பட்டால் திறந்தவெளிக் கிடங்குகளிலும் சேமிப்பதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்கொள்முதலில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை சரிசெய்வதற்கு, தேவையான இடங்களில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைத்து விரைந்து விவசாயிகள் அறுவடை செய்திருக்கக்கூடிய நெல் அனைத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.