மு.க. முத்துவின் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
பழனிசாமி தன் இரங்கல் செய்தியில், “ உடல்நலக் குறைவால் மு.க.முத்து காலமானார் என்பதைக் கேட்டு வருத்தமுற்றேன். அன்புச் சகோதரர் அவர்களை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தன் இரங்கல் குறிப்பில், “ மு.க.முத்து, தனது 20 வயதில் தாயை இழந்து விட்ட நிலையில், சின்ன அன்னை தயாளு அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். கலைஞரின் அரசியல் பணிக்கு பக்கபலமாக திகழ்ந்தவர். திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். அவரின் இளவலும், இன்றைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வளர்ச்சி கண்டு மகிழ்வும், பெருமிதமும் அடைந்தவர். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தவர்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து வாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.