புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள், முகாம்களாக மாற்றப்பட்டு , வீடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றி வருவதாக செய்தி வருகிறது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
”ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த திமுக அரசு. வயிற்றுப் பசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ,மறக்கவோ மாட்டார்கள்.” என்றும் அவர் சாடியுள்ளார்.
”பேரிடர்க் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளையும் தடையின்றி கிடைத்திட உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்றும் பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.