பொள்ளாச்சி அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்
பொள்ளாச்சி அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்

மோடிப் புளுகு... கள்ளக் கூட்டணி- பொள்ளாச்சியில் ஸ்டாலின் காட்டம்!

பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தும் காட்டமாகச் சாடியும் பேசினார். 

பொள்ளாச்சியில் இன்று காலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது:

“ மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்கியதால் தான் தமிழ்நாட்டினுடைய தொழில்வளம் உயருகிறது! வேலைவாய்ப்பு பெருகுகிறது! பொருளாதாரம் வளருகிறது! ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது. அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு, தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துகின்ற வகையில், பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப “வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி” நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டுகிற நேரம் வந்துவிட்டது! வந்துவிட்டதா, இல்லையா?

நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் வரலாற்றை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்கின்ற காலம் வந்துவிட்டது.

கோவைக்கும், நீலகிரிக்கும், திருப்பூருக்கும், ஈரோட்டுக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டுவந்த ஆட்சிதான் உங்களுடைய திராவிட மாடல்  ஆட்சி.

அதுமட்டுமில்லாமல், இந்த 4 மாவட்டங்களில் 560 கோடியே
5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 273 திட்டங்கள் இன்றைய விழாவில், மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

489 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

223 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 57 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இவற்றின் மொத்த மதிப்பு 1,273 கோடியே 51 லட்சம் ரூபாய்!

அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஆட்சியாக கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. அவர்களால் இப்படி பட்டியலிட்டுச் சொல்ல முடியுமா?

மேற்கு மண்டலத்தை தங்களுடைய கோட்டை என்று சொல்லிக்கொண்டார்களே! வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?

இத்தனைக்கும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிமுக ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த மேற்கு மண்டலத்துக்குச் செய்தது என்ன?

மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள்ளாச்சி சம்பவம்!  மறந்திட முடியுமா!      பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரியமாக அதிமுக ஆட்சியில்  வலம் வந்தார்கள்! புகார் கொடுத்தவர்களை மிரட்டினார்கள்!

திமுக மகளிரணி சார்பில்தான், போராட்டம் நடத்தினார்கள். பிறகு, நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள்! ஆனால், சாட்சிகள் மிரட்டப்படுகின்ற வேடிக்கையைப் பார்த்தார்கள்!

பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி அன்றைய முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டபோது, “அப்படியெதுவும் இல்லை. ஆதாரம் இருந்தால் கொடுங்க" என்று சொன்னார். நான் அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது சொன்னேன். இதை நான் சும்மா விடமாட்டேன். நிச்சயமாக, இதற்குரிய நடவடிக்கையை இந்த ஸ்டாலின் உறுதியாக எடுப்பான் என்று அப்போதே நான் உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்துவிடவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில, அந்தப் பெண்ணுடைய பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.

அந்த வழக்கு சிபிஐ விசாரித்து இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது! அதுமட்டுமா! முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவம் நடந்தது இல்லையா!

அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, போராடியவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது யார் ஆட்சியில்? பெண் போலீஸ் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்?

தூத்துக்குடியில், 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்றது யாருடைய ஆட்சியில்?

கஞ்சா – குட்கா மாமூல் பட்டியலில், அமைச்சரும், டி.ஜி.பி.யுமே இருந்தார்களே, அது யாருடைய ஆட்சியில்? அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணிதான், இன்றைக்கு உத்தமர் வேஷம் போடுகிறார்கள். இந்தக் கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்றி பிரிந்த மாதிரி நடித்துக்கொண்டு வருகிறார்கள். நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு நலனுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எதிரான அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணி ஒருபக்கம் என்றால், தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டை வளமாக்க – தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மற்றொரு பக்கம் ஜனநாயகச் சக்திகளும்-தி.மு.க.வும் ஒற்றுமையாக நிற்கிறோம்!

ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாத போதே, இத்தனை சாதனை திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது என்றால், நமக்கு உதவி செய்கின்ற ஒன்றிய அரசு அங்கே அமைந்திருந்தால், இன்னும் பத்து மடங்கு சாதனைகளை இந்த திமுக செய்திருக்கும். அதற்கான நேரம் நெருங்கி வருகிறது!

நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத பிரதமர், ’மோடியின் உத்தரவாதம்’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம், டிவி-யில் விளம்பரம்  செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் அவர்களே… மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் கொடுத்த பழைய உத்தரவாதமான ஒவ்வொருவருக்கும்
15 இலட்சம் ரூபாயின் இன்றைய கதி என்ன?

இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உத்தரவாதம் தந்தீர்களே அதன் கதி என்ன? அதை சொல்லுங்கள் பிரதமர் அவர்களே!

அதுகூட வேண்டாம், அடுத்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாக செய்தி வந்திருக்கிறது. வரப்போகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்து தந்திருக்கின்ற சிறப்புத் திட்டங்களை பட்டியலிடுங்கள்! என்ன சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் கேட்கவேண்டும்! ”பதில் சொல்லுங்க பிரதமரே..” என்று எல்லோரும் கேட்க வேண்டும். கேட்பீர்களா!

கடந்த முறை வந்தபோது பேசுகிறார்… பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகின்ற திட்டங்களை தி.மு.க. தடுக்கின்றது என்று பிரதமர் சொல்கிறார். பிரதமர் அவர்கள் சொல்கிறார். அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை, நாம் சென்று தடுக்கிறோமா!

நீங்கள் ஒரு பழமொழி கேட்டிருப்பீர்கள், அண்ட புளுகு ஆகாசப் புளுகுனு சொல்லுவார்கள் – அது மாதிரி, இது மோடி புளுகு! அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்; நாம் தடுப்பதற்கு? எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா? நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ல் அறிவித்தார்கள். அப்போது யார் தமிழ்நாட்டில் முதலமைச்சர்? மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அவர் தடுத்தாரா? இல்லையே.

அடுத்து, உங்கள் நண்பர்கள் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் அவர்கள் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், நாங்கள் தடுத்தோமா? இல்லை, தமிழ்நாட்டு மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே? உங்களை யாரும் தடுக்கவில்லையே! ஆட்சியில் இருந்த பத்து வருஷமாக தமிழ்நாடின் திரும்பி பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் என்ன இளிச்சவாயன்களா?

பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! இனி இந்த பொய்களும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது!

மாநிலத்தைக் கெடுத்த அதிமுக - மாநிலத்தை கண்டு கொள்ளாத பா.ஜ.க! இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனே முக்கியம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய, நமது திராவிட மாடல் அரசுக்கு, தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் துணை இருப்பது போல், உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தயாராகிவிட்டார்கள். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! இந்தியாவை காப்போம்!” என்று மு.க.ஸ்டாலின் பேசினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com