த.வெ.க. தலைவர் விஜய் நாளைமறுநாள் 18ஆம் தேதியன்று ஈரோட்டில் பரப்புரைக் கூட்டத்தில் பேசுகிறார்.
இக்கூட்டத்தில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஊடகத்தினரிடம் விவரித்துள்ளார்.
அதன்படி, நாற்பது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
தனியார் 120 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இருபது இடங்களில் தண்ணீர்த் தொட்டிகள் வைக்கப்படவுள்ளன.
கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் குடுவைத் தண்ணீர் வழங்கப்படும்.
72 இடங்களில் ஆண், பெண் தனித்தனிக் கழிப்பிடங்கள் அமைக்கப்படும்.
24 இடங்களில் அவசர ஊர்திகளும், மூன்று இடங்களில் தீயணைப்பு வண்டிகளும் நிறுத்திவைக்கப்படும்.
கார்கள் உட்பட நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள் போன்றவற்றுக்காக 60 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களுக்காக இரண்டு ஏக்கர் பரப்பில் நிறுத்துமிடம் தயார் செய்துவைக்கப்பட்டுள்ளது.
கட்சியினர் 10 ஆயிரம் பேரும் பொதுமக்கள் 25 ஆயிரம் பேரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
கூட்டத்துக்கு வருவோருக்கு பாஸ், கியூஆர் கோடு போன்ற எதுவும் இல்லை என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.