வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு மறைவு!

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு மறைவு!
Published on

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு சுப்பிரமணிய கட்டபொம்மு துரை தன் 87ஆவது வயதில் இன்று காலமானார்.


வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வம்சாவளியான, தமிழக அரசின் மானியம் பெற்று வந்த வீமராசா எனும் வீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை மாரடைப்பால் இன்று இயற்கை எய்தினார்.

இவரின் மறைவையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ”பாஞ்சாலங்குறிச்சி வேந்தரும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை ஏதிர்த்து வீரச் சமர் புரிந்து இறுதியில் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் எண்ணற்ற பீரங்கிகளும், துப்பாக்கிகளும் தாங்கிய பிரிட்டிஷ் பெரும்படையால் தோற்கடிக்கப்பட்டு, திருச்சியில் இருக்கும் பிரிட்டிஷ் கம்பெனியின் உயர் அதிகாரிகளிடம் நியாயம் கேட்கலாம் என முடிவெடுத்து, கோலார்பட்டி அரண்மனையிலிருந்து வெளியேறி, புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்பட்ட காளாப்பூர் காடுகளில் மறைந்திருந்த போது, பிரிட்டிஷ் படைகளுக்கு புதுக்கோட்டை மன்னர் காட்டிக் கொடுத்ததால், கைது செய்யப்பட்டு, கயத்தாற்றில் விசாரணை என்ற போலி நாடகத்தை பிரித்தானிய தளபதி மேஜர் பானர்மேன் நடத்தி அளித்த தீர்ப்பால் கயத்தாற்றில் புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்ட பெருவீரன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். 


”ஆண்டுதோறும் அக்டோபர் 16 இல், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாளில் கயத்தாற்றுக்கு நினைவஞ்சலி செலுத்த நான் செல்லும்போதெல்லாம் எனக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற வீமராசா அவர்கள் தன்னடக்கம் மிகுந்த சிறந்த பண்பாளர் ஆவார். அவரது மறைவினால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், கட்டபொம்மன் வம்சாவளி கம்பளத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.” என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com