கறவை மாடுகள்
கறவை மாடுகள்

வெயில் உக்கிரம்... கறவை மாடுகள்... உஷார் சொல்லும் பால்வளத் துறை!

இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் வெயி்லின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் கறவை மாடுகளை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு பால் வளத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

பால் வளத் துறையின் இயக்குநர் சு.வினீத் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுட்டெரிக்கும் வெயிலில் கறவை மாடுகளைக் காத்திட பால் உற்பத்தியாளர்களே கவனியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதில், “ தற்போதைய கோடைக்காலத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை கூடுதலாகக் காணப்படுவதால் கறவை மாடுகளுக்கு வெப்ப அயற்சியின் காரணமாக தீவனம் உட்கொள்ளும் திறன் குறைந்து அவற்றின் பால் உற்பத்தி பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. எனவே, கறவை மாடுகளின் உற்பத்தித் திறனை பாதுகாத்திட உரிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றும், 

”சூரிய ஒளியின் நேரடித் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட கறவை மாடுகளை பகற்பொழுதில்  நல்ல காற்றோட்டமான கொட்டகையிலும் அல்லது மரத்தடி நிழலில் இருக்குமாறு செய்ய வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், “ கறவை மாடுகள் தண்ணீர் அருந்தும் குடிநீர்த் தொட்டிகளை நிழலில் இருக்குமாறும் அதில் எப்பொழுதும் தூய்மையான தண்ணீர் குடிக்க கிடைக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். வெப்ப அயற்சியின் சோர்வைப் போக்க தாது உப்பு கலந்த தண்ணீரை கொடுப்பது நன்று. 

நிறைமாத சினையாக உள்ள கறவை மாடுகளில் வெப்ப அயற்சியின்  தாக்கத்தினால்  தீவனம் உண்பதில் நாட்டம் குறையும். இதனால் கருவில் வளரும் கன்று வளர்ச்சிக்குத் தேவையான  அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் ஆரோக்கியமான கன்று ஈனுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு கோமாரி, அம்மை, அடைப்பான் போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.  இந்நோய்த் தாக்குதலிலிருந்து கறவை மாடுகளைப் பாதுகாக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய தடுப்பூசிகளை கறவை மாடுகளுக்கு போட வேண்டும்.

கோடை காலத்தில் வறட்சி காரணமாக ஏற்படும் தீவனப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் ஊறுகாய் புல், உலர் புல் போன்ற பதப்படுத்திய பசுந்தீவனங்களை இருப்பில் வைத்து கறவை மாடுகளுக்கு அளிப்பது நன்று.” என்று பால் வளத் துறை இயக்குநர் கூறியுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com