அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த பிறகு, அதற்குள் சலசலப்பு வந்தால் கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா அளித்த பேட்டி: ஜனவரி மாதம் 9ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து மிகப்பெரிய அறிவிப்பு இருக்கும். அமலாக்கத்துறை சோதனை நடப்பது புதிதல்ல. நிச்சயமாக யார் தவறு செய்தாலும் தண்டனை பெற்று ஆக வேண்டும். மக்கள் வரிப்பணத்தை லஞ்சமாகவும், ஊழலாகவும் செய்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆயிரம் ரூபாய் திட்டம் என மூளை சலவை செய்து பெண்களின் ஓட்டுக்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதனால் தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பாஜகவினர் அதிமுகவினரை குறித்து விமர்சிக்கக் கூடாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''கூட்டணி என்று அமைத்த பிறகு அதற்குள் சலசலப்பு வந்து விட்டால் கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கருத்துக்கள் சொல்வதை கட்டுப்படுத்துகின்றனர்.” என பிரேமலதா பதில் அளித்தார்.