''எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார்'' என தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
செங்கல்பட்டில் எஸ்.ஆர்.எம். பல்கலை நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: தேசிய கட்சிகள் தேசிய பிரச்னைகளை முதன்மையாகவும், மாநில நலனை முக்கியமாகவும் வைக்க வேண்டும்.
மாநில கட்சிகள் மாநில பிரச்னைகளை முதன்மையாகவும், தேசிய நலனை முக்கியமாகவும் நினைக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலானது, ஆளுமை மிகுந்த மனிதர்களால், நல்லபடியாக மாறும். இன்று இக்கட்டான சூழலில் அரசியல் உள்ளது. பிராந்திய கட்சிகளும் தேசிய கட்சிகளும் எக்ஸ்ட்ரீம்க்கு செல்லும்போது, மக்கள் இடையே மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
ஒரு அரசியல் தலைவர், ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட, ஒரு போர்க்களத்தில் இருக்கும் தளபதியாகத்தான் சீமானை பார்த்து கொண்டு இருக்கிறேன். காரணம் அவரது கொள்கை, அந்த கொள்கையில் அவர் எடுத்து இருக்கும் உறுதிபூண்ட கொள்கை, அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக போர் களத்தில் போராடும் மாண்பு. இது தமிழக அரசியலில் சீமானை தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது.
எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவ்வளவு தான் வித்தியாசம். இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இல்லை.
நான் சீமானுக்காக தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு இருப்பதற்கான காரணம். இன்றைக்கு அரசியல் களத்தில், நேர்மை குறைந்து இருக்கிறது. அது இருக்க கூடிய சீமானும், நானும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. சீமானுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.