தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இல்லை! - அன்புமணி
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, தமிழகத்தில் அந்த கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக நீண்ட காலமாக இடம்பெற்று வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாமக-வுக்கு ஏழு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாமக, இதே கூட்டணியில் இருக்குமா? எதிர் அணிக்கு மாறுமா? தனிக் கூட்டணி அமைக்குமா? என கேள்விகள் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகளை பல சமயம் பாமக மாறிமாறி எதிர்த்து வருவதன் பின்னணியே இந்தக் கேள்விகளுக்கான காரணமாக உள்ளது.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று மதுரைக்கு வந்தார். நெய்வேலி போராட்டம் தொடர்பாக கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 18 பாமக-வினரை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாங்கள் இப்போது இல்லை என்று தெரிவித்தார்.
“டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக உள்ளது; தமிழ்நாட்டில் அக்கூட்டணியில் பாமக இடம்பெற்றிருக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திப்போம்.” என்று குறிப்பிட்டார்.