திருச்செந்தூர் குடமுழுக்கு விழா கோலாகலம்… விண்ணை பிளந்த ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...’ கோஷம்!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா
திருச்செந்தூர் குடமுழுக்கு விழா
Published on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதை நேரில் காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷங்களை முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயில் குடமுழுக்கு விழாவுக்கு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடிக்கு ஒதுக்கு பணிகளை மேற்கொண்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. கடந்த 1ஆம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு கும்பங்கள் எடுத்து கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காலை 6.22 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 20 பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோயில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். மேலும், கும்பாபிஷேகத்தை தங்குதடையின்றி பக்தர்கள் காண்பதற்கு வசதியாக நகர் முழுவதும் முக்கிய பகுதிகளில் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. மாநில சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் சுமார் 6000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com