உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது!

உத்தரகண்டில் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது
உத்தரகண்டில் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது
Published on

உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, 2022 சட்டசபைத் தேர்தலின் போதே, பா.ஜ.க. வாக்குறுதி அளித்து இருந்தது.

இதை தொடர்ந்து, அந்த தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.

இதற்கிடையே, பொது சிவில் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின், 2024 மார்ச் 12இல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த சட்டம் உத்தரகண்டில் இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாக, அம்மாநில முதல்வர் தாமி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளின் ஒப்புதலை பெறுதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உட்பட, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து தயாரிப்புகளும் நிறைவடைந்துள்ளன.

பொது சிவில் சட்டம் உத்தரகண்டில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டம், சமூகத்தில் சீரான தன்மையை ஏற்படுத்துவதுடன், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை மற்றும் பொறுப்புகளை உறுதி செய்யும்.

பொது சிவில் சட்டத்தின் கீழ், ஜாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டும் தனிப்பட்ட சிவில் விவகாரங்கள் தொடர்பான அனைத்து சட்டங்களிலும், ஒரே சீரான தன்மையை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய நதிகள் உத்தரகண்டில் இருந்து துவங்கி, பிற மாநிலங்களுக்கு பாய்கின்றன. அதே போல, பொது சிவில் சட்டமும் உத்தரகண்டில் தொடங்கி பிற மாநிலங்களுக்கு பாய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பட்டியல் பழங்குடியினத்தவரை தவிர அனைத்து மதம் மற்றும் ஜாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, வாரிசுரிமை உள்ளிட்டவற்றில் ஒரே மாதிரியான, சமமான விதிகளை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருமணங்கள் மற்றும் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதை பதிவு செய்ய வேண்டும் என்பதை இந்த சட்டம் கட்டாயமாக்கி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com