மாநாட்டு திடலில் அண்ணாவின் படத்தை வைத்துவிட்டு, அவர் தோற்றுவித்த திமுகவை விஜய் ஒழிக்க நினைப்பதாக சீமான் கூறியுள்ளார்.
தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற உள்ளது. மாநாட்டு மேடையின் முகப்பில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜய் மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திமுகவை ஒழிப்பதே ஒருவருக்கு லட்சியமாக இருக்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதை விஜய் சொல்ல வேண்டும். மறுபடியும் அண்ணா, எம்ஜிஆர் படங்களை ஏன் வைக்கிறீர்கள்? அண்ணா திமுகவையும் எம்.ஜி.ஆர். அதிமுகவையும் தோற்றுவித்தார்கள். இதில் அண்ணா தோற்றுவித்த கட்சியை விஜய் ஒழிக்க நினைக்கிறார்.
இங்கு அறுபது ஆண்டுகாலமாக அவர்கள் தோற்றுவித்த அரசியல் தான் நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்தை வைப்பீர்களா? நேரத்துக்கு ஏற்ற மாதிரி செய்யக் கூடாது.
விஜய்க்கு பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள். எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள். அனைவரின் நலனுக்காகவும் தான் நான் போராடுகிறேன்.
சரியான தத்துவத்தை முன்வைத்து விஜய் நகரவேண்டும். ஏற்கெனவே உள்ள அரசியல் கட்சிகள் பேசும் அதே விஷயத்தை பேசக் கூடாது.