பல்கலை வகுப்புக்கு செல்லாமல் இருந்தாலோ, பாதியில் படிப்பை நிறுத்தினாலோ விசா ரத்து செய்யப்படும் என்று இந்திய மாணவர்களை அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க கல்வி நிலையங்களில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். டிரம்ப் அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றது முதல் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அச்சத்திலேயே உள்ளனர்.
விசா தொடர்பான அவரது அறிவிப்புகளால் அமெரிக்காவில் தொடர்ந்து படிக்க முடியுமா என்ற சந்தேகம் இந்திய மாணவர்கள் மனதில் எழுந்திருக்கிறது. இந்நிலையில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அந்நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு இடைநிற்றல் அல்லது வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாமல் புறக்கணித்தல் அல்லது பள்ளி, கல்லூரி நிர்வாகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் தாங்கள் சேர்ந்துள்ள பட்டப்படிப்பிலிருந்து இடைநிற்றல் ஆகிய செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விசா திரும்பப் பெறப்படும்.
மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு செல்வதற்கான எந்தவொரு விசாக்களையும் பெற முடியாத, தகுதியிழக்கும் சூழலுக்கும் மேற்கண்ட மாணவர்கள் ஆளாவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் இதுவரை 4,700 வெளிநாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் அனுமதியை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.