காசா, பாலஸ்தீனம்
காசா, பாலஸ்தீனம்

காசா - 100 நாள்களில் 24,000 பாலஸ்தீனர்கள் படுகொலை!

காசா மீதான இஸ்ரேல் படைகளின் போர்த் தாக்குதல் தொடங்கி கடந்த ஞாயிறுடன் 100 நாள்கள் ஆகிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் 24 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 9,600 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, காசாவின் மக்கள்தொகையில் நூற்றுக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு மூன்று பேர் என்கிற அளவில் மொத்தம் 60 ஆயிரம் பேர் இஸ்ரேல் தாக்குதலால் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவுடன் சதவீதப்படி ஒப்பிட்டால், அந்த நாட்டி 33 இலட்சம் பேர் கொல்லப்பட்டும், ஒரு கோடி பேர் காயமடைந்தும் இருப்பார்கள் எனக் கருதலாம்.

காசாவின் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால், சரிபாதி மருத்துவமனைகள் முற்றாக அழிக்கப்பட்டோ சேதமடைந்தோ போய்விட்டன. 36 பெரிய மருத்துவமனைகளில் 15 மட்டுமே பகுதியளவில் இயங்கிவருகின்றன. அதுவும், மருந்து, கருவிகள், ஆளணி பற்றாக்குறையுடன்தான் அந்த மருத்துவமனைகளும் செயல்படுகின்றன.

கடந்த மாத நிலவரப்படி, காசாவின் 85 சதவீதமானவர்கள்- 19 இலட்சம் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்துவிட்டனர். 365 சதுர கி.மீ. பரப்புள்ள காசா முனை பகுதியில் மூன்றில் ஒரு மக்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளதைப் போல ஆக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே உணவு, குடிநீர், மின்சாரம், அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர் என்றும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com