போரால் சீர்குலைந்த நாடான இலங்கைக்கு இந்திய, சீன அரசுகளின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன. இரு நாடுகளிடமிருந்தும் அந்நாட்டு அரசு உதவிகளைப் பெற்றுக்கொள்கிறது.
இதில், ஒரு பகுதியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு சீன அரசின் சார்பில் 500 வீடுகள் அளிக்கப்படுகின்றன.
அந்நாட்டுக் கடல் தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார். அதையடுத்து, 500 வீடுகளும் 50 கோடி இலங்கை ரூபாய, அரிசியும் 50 கோடி ரூபாய் மீன் பிடி வலைகளும் வழங்க சீன அரசு ஒப்புக்கொண்டது.
சீன அரசால் வழங்கப்பட்ட 500 வீடுகளும் பொருத்து வீடுகள் என அழைக்கப்படும் ஏற்கெனவே தயார்நிலையில் செய்யப்பட்ட வகையிலான வீடுகள் ஆகும். நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்துசேர்ந்த இந்தப் பொருத்து வீடுகளை அமைச்சர் டக்ளஸ் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இத்திட்டத்தின்படி, கல்முனை பிராந்தியத்தில் உள்ள மீனவர்களுக்கு கடல் தொழில் அமைச்சகத்தின் மூலம் 64 பொருத்து வீடுகள் வழங்கப்படும் என அம்பாறை மாவட்ட உதவி ஆணையர் சிறிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயனாளி கல்முனை முதல் பாணகம்வரையிலான ஊர்களில், வசிக்கக்கூடிய 28 வயதுக்கு மேற்பட்ட மீனவராகவும் சொந்த நிலம் இருந்து இருக்க வீடு இல்லாதவராக இருக்கவேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.