ஐரோப்பா முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உட்பட்ட நாடுகளில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி உள்ளது.
" ஜூன் 21 முதல் 1300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் கண்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான கட்டடங்கள் வெப்பத்தின் தாக்கத்தால் சேதமடைந்துள்ளன. இதிலிருந்து மக்களைக் காக்க நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் எடுக்க வேண்டும்." என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் மட்டும் இதுவரை 1,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெப்பத்தால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதுடன், மின்சார உற்பத்தி, ரயில் போக்குவரத்து, மற்ற பொதுச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பருவநிலை மாற்றமே இந்தத் தீவிர வெப்ப அலைக்கு முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்குப் பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்தாலும், தற்போது மத்திய ஐரோப்பிய நாடுகளை நோக்கி வெப்ப அலை நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.