ஏமனில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் செய்தியாளர்கள் 31 பேர் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக, ஏமனில் அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நாளிதழ் ஒன்றின் அலுவலக கட்டடத்தை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த கட்டடத்தில் ஹவுதியுடன் தொடர்புடைய மூன்று ஊடக நிறுவனங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவத்தினரின் இந்த தாக்குதலில் நாளிதழின் தலைமை ஆசிரியர், 30 செய்தியாளர்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் 131 பேர் காயமடைந்தனர் என்று ஏமனின் ஹவுதி படையினர் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
''இந்த தாக்குதல் மிருகத்தனமானது மற்றும் நியாயமற்றது'' என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம், தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிக்கையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.