
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இதுவரைக் காணாத வகையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாத மின்னல், இடி முழக்கங்களுடன் கூடிய கனமழை பொழிந்தது. இதனால், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது.
இதுகுறித்து நெதர்லாந்து வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள விவரம்:
“நாடு முழுவதும் 24 மணி நேர இடைவெளியில் 3,00,000க்கும் அதிகமான மின்னல் வெட்டுகள் பதிவாகியுள்ளன. 30 நிமிடங்களில் 30,000 மின்னல் வெட்டுகள் தாக்கியுள்ளன.
இதுபோன்ற பயங்கர இடி, மின்னலுடன் கூடிய மழை வருவது ஓர் அரிய நிகழ்வு. இந்த மழைக்கான காரணம், அங்கு நிலவிய சுட்டெரிக்கும் வெயில் தான். ஆம்ஸ்டர்டாமில் ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியும், சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸைத் நெருங்கியும் வருகிறது.” என்று நெதர்லாந்து வானிலை ஆய்வுத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த மழை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் மின்னல் தாக்கியதில் வீடுகளும் கட்டடங்களும் தீப்பற்றி எரிந்தன.
இதுமட்டுமின்றி, வானில் இருந்து பெரிய பெரிய ஆலங்கட்டிகள் பல இடங்களில் கொட்டித் தீர்த்தன.