குவைத் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
மேற்கு ஆசிய நாடான குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நேற்று குவைத் வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.
இன்று குவைத் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் விவாதித்தார்.
இந்நிலையில், குவைத் நாட்டின் உயரிய விருதான ' ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' விருது வழங்கி அந்நாடு கௌரவித்தது.
நட்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவர்கள், அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர், இந்த விருதானது அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருந்தது.