இத்தாலியின் நீண்ட காலப் பிரதமராக பதவி வகித்துவரும் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:
"இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக பணியாற்றி வரும் எனது நண்பரான மெலோனிக்கு வாழ்த்துகள்.
இந்த வரலாற்றுச் சாதனை, இத்தாலி மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், ஆதரவையும் காட்டுகிறது. இந்தியா - இத்தாலி இடையிலான உறவை வலுப்படுத்தவும் அவரது நட்பு முக்கிய பங்காற்றுகிறது.
இரு நாட்டு மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க, தொடர்நது பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வரும் ஆண்டுகளில் தொடர்ந்து அவர் வெற்றிப் பெற என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் 22ஆம் தேதி இத்தாலியின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மெலோனி, இன்றுடன் 1,414 நாள்கள் பிரதமராக பணியாற்றி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.