விஞ்ஞானி ஐன்ஸ்டீன் படித்த பல்கலைக்கழகம் திடீர் விலகல்!
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் படித்த சூரிச் பல்கலைக்கழகம், சர்வதேச தரவரிசைப் பட்டியலிலிலிருந்து திடீரென விலகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகம் ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் நல்ல பெயரைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் அங்கு சென்று மாணவர்கள் ஆய்வுகளிலும் முதுநிலைப் படிப்புகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் சமர்ப்பித்தார் என்பதும் இதன் புகழுக்கு முக்கிய காரணம்.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் பன்னாட்டுத் தர வரிசைக்கான செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வது என திடீரென முடிவுசெய்துள்ளது. அடுத்த ஆண்டு தர வரிசைக்கான விண்ணப்பம் முதலிய ஆவணங்களையும் அது அனுப்பவில்லை.
பன்னாட்டுத் தர வரிசை பெற வேண்டும் என்பதற்காக, தேவையில்லாமல் ஆய்வுகளைச் செய்து தரமற்ற, தரம்குறைந்த ஆய்வுமுடிவுகளை வெளியிட வேண்டியிருப்பதை பல்கலை. நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
பேரும் புகழும் பெறுவதற்காக பல்கலைக்கழகத்தினரை இயந்திரம் போல இந்தத் தரவரிசைச் செயல்பாடு மாற்றிவிட்டதாகவும், இலாபநட்டக் கணக்குப் பார்க்கவைக்கும் இந்த ஓட்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பல்கலை. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.