தடுப்பூசி கம்பெனியுடன் முதல்வர் பயணத்தில் ஒப்பந்தம்!

தடுப்பூசி கம்பெனியுடன் முதல்வர் பயணத்தில் ஒப்பந்தம்!
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஐரோப்பா முதலீட்டுச் சந்திப்புகளின் போது, இந்துஜா குழுமம், தடுப்பூசி நிறுவனமான ஆஸ்ட்ரா ஜெனிகா ஆகியவற்றுடன் தமிழக அரசின் சார்பில் இலண்டனில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன.

இங்கிலாந்தைத் தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமம், மின்சார வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி உற்பத்தி, BESS (பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு) மற்றும் மின்சார சார்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்களில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்தி 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். ​​

மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் (AstraZeneca) இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (GITC) 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது.

இதன்மூலம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு 15,516 கோடி ரூபாயாகும். இதன்மூலம் 17,613 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இந்துஜா குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பில் அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை திட்டமிட்டு, நிலையான இயக்கம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மேம்படுத்துகிறது.

அஸ்ட்ராஜெனெகாவின் GITC, அஸ்ட்ராஜெனெகாவின் உலகளாவிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்துகிறது. இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதன் மூன்றாவது முதலீட்டினை செய்துள்ளது. இது மாநிலத்தின் திறன் வளர்ச்சி மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான நிர்வாகத்தின் மீது உள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த முதலீடுகள் இங்கிலாந்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சந்திப்புகளின் போது வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இது GCC-க்கள், உற்பத்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்வி போன்ற துறைகளில் 1,293 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 820 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கிலாந்து நாட்டு முதலீட்டாளர்கள் சந்திப்புகளுக்கு முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான குழு ஜெர்மனியிடமிருந்து 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7,020 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன்மூலம் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமொடிவ் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது ஆகும்.” என்றும் அரசுச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com