உயிரோடுதான் இருக்கிறார் பெண் செய்தியாளர் பயான்!
காசா பகுதியில் களமுனைச் செய்தியாளராகப் பணியாற்றிவந்த பயான் அபுசுல்தான் உயிருடன் மீண்டுவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
இஸ்ரேலியப் படைகளால் துளைக்கப்பட்டு வரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இன்றுவரை நூற்றுக்கணக்கானவர்கள் அன்றாடம் கொல்லப்படுவதாக உள்ளூர் ஊடகத்தினர் தெரிவிக்கின்றனர். இதில் காசா பகுதியில் நேரடியாகக் களத்திலிருந்து செய்திகளை வழங்கிவந்த பயான் அபுசுல்தானின் செய்திகள் உலக அளவில் கவனிக்கப்பட்டுவந்தன.
கடைசியாக, இவர் கடந்த 19ஆம்தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்திக்குப் பிறகு, எந்தத் தகவலையும் பதியவில்லை. தன் கண் முன்னாலேயே தன்னுடைய ஒரே சகோதரனை இஸ்ரேல் படையினர் கொன்றுவிட்டதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பிறகு, அவரைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு பயானைப் பற்றி கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஐ.நா.சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதுபற்றி தங்களின் கரிசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், பயானின் ட்விட்டர் பக்கத்தில், நான் உயிர் தப்பினேன் என்று பதிவிடப்பட்டதால், ஊடகத்தினரும் மற்ற பல தரப்பினரும் பயான் உயிருடன் இருக்கக்கூடும் என நிம்மதி அடைந்துள்ளனர்.