பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல குடிப்பதற்கும் உகந்தது! – யோகி ஆதித்யநாத்

கும்பமேளா
கும்பமேளா
Published on

கழிவுகள் அதிகம் கலப்பதால் பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு தகுதியற்றதாக இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியிருந்த நிலையில், அதை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார்.

மகா கும்பமேளா நிகழ்வில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,

"சனாதன தர்மத்திற்கு எதிராக பொய்யான விடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கங்கையும் மகா கும்பமேளாவும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல, குடிப்பதற்கும் ஏற்றதுதான். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம்.

ஏனெனில் இந்த நிகழ்வு ஒரு கட்சியாலோ அல்லது ஒரு அமைப்பினாலோ ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. இது சமூகத்திற்கானது. தவறான பிரசாரங்களை விடுத்து கோடிக்கணக்கான மக்கள் நிகழ்வில் பங்கேற்று இதனை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்.

தற்போது வரை 56 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இன்னும் 7 நாள்கள் விழா நடக்கவிருக்கிறது" என்று பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com