அ.தி.மு.க. சார்களை மறந்துட்டீங்களா?- அமைச்சர் சிவசங்கர் சரமாரி கேள்விகள்!

SS SIVASANKAR
அமைச்சர் சிவசங்கர்
Published on

அ.தி.மு.க. ’சார்’களை மறந்துவிட்டீர்களா பழனிசாமி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் சிவசங்கர் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

”சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பள்ளி சிறுமி தனது தோழியின் இல்ல விழாவிற்கு செல்வதாக கூறி சென்றவர்  வீடு திரும்பவில்லை என்ற புகாரின் அடிபடையில் உடனடியாக வழக்கு பதிந்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர் காவல்துறையினர். மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவரின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் அவரோடு இருந்த இரண்டு பள்ளி சிறுமிகளையும் மீட்டுள்ளனர். மூன்று சிறுமிகளையும் காதலிப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து குற்றவாளிகள் அனைவரையும் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். மேற்கொண்டு இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

புகார் பெறப்பட்ட உடனே விரைவாக செயலாற்றி பள்ளி மாணவிகளை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி பெண்கள் தொடர்பான புகார்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியை போன்று அலட்சியமாக இல்லாமல் தீவிரமாக செயலாற்றி வருகிறது தமிழ்நாடு காவல்துறை. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில்  குற்றத்தின் மீதான விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையை பெற்றுக்கொடுத்தும் வருகிறது திராவிட மாடல் ஆட்சி.

விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியிலும் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அலையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி அவதூறுபதிவு போட்டுள்ளார்.

"சார்"களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் "சார்"களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் "சார் யார்" என மறந்து விட்டீரா பழனிசாமி.? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் "சார் யார்" என்பதை மறந்துபோனீரா பழனிசாமி.? மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ’’சார் யார்’’ என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ’’சார் யார்’’ என்பது மறந்து போனதா?

நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் "அதிமுக சார்களை" மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமயிலான திராவிட மடல் ஆட்சி பெண்கள் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறதோ அதே அளவு முக்கியத்துவதோடு பெண்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக  திகழ்கிறது தமிழ்நாடு.” என்று அமைச்சர் சிவசங்கரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com