ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு நாளில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் செல்வப்பெருந்தகை தன் சமூக ஊடகப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவரின் சமூக ஊடகப் பதிவு:
”திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை.
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்.
இவரின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.” என்று செல்வப்பெருந்தகையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.