ஓய்வுக்குமுன் பேராசிரியரை நீக்கவைத்த கிரிமினல் வழக்கு துணைவேந்தர்!

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்
Published on

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்தார் என அவர் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. அதன் முடிவு வெளிவராத நிலையில் அவர் நாளைமறுநாள் ஓய்வு பெறவிருக்கிறார்.

ஓய்வுபெறுவதற்கு இரண்டு நாள்களே இருந்தபோதும், அவர் சர்ச்சையில் சிக்காமல் போகமாட்டேன் என்பதைப் போல செயல்படுகிறார் எனக் குற்றச்சாடு எழுந்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் தமக்கு பிடிக்காதவர்களையும், கடந்த காலங்களில் தமது  தவறுகளை  விமர்சித்தவர்களையும் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 

பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் வைத்தியநாதன். இவர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துவருகிறார்.

பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானபோது, துணைவேந்தராக இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கும் குறைவான பதவிக்காலமே இருக்கும் போது, புதிய நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்று உயர்கல்வித் துறைச் செயலாளராக இருந்த சுனில் பாலிவால் அனுப்பியிருந்த சுற்றறிக்கையைச் சுட்டிக்காட்டி பதிவாளர் நியமனத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று இவர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் ஊடகங்களிலும் வெளியானது.

”அதைக் காரணம் காட்டி வைத்தியநாதனை பதிவாளர் மூலம் பணியிடை நீக்கம் செய்து  துணைவேந்தர் ஆணையிட்டுள்ளார். இது தவறானது. துணைவேந்தருக்கு எதிரான இரு வழக்குகளின் விசாரணையில் வைத்தியநாதன்  முதன்மை சாட்சியாக இருப்பதால் அவரை பழிவாங்கும் நோக்குடனும், மிரட்டும் நோக்குடனும் இந்த நடவடிக்கையை துணைவேந்தர் மேற்கொண்டுள்ளார். இது துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு எதிரானது.” என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார். 

”துணைவேந்தர் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இத்தகைய பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை அரசு அனுமதிக்கக்கூடாது; இதை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும் கூடாது. இதற்கெல்லாம் மேலாக, துணைவேந்தர் பொறுப்பிலிருந்து தாம் ஓய்வு பெற்றாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமக்கு ஆதரவாக உள்ள சில பேராசிரியர்களை நிர்வாகக் குழுவில் நியமிக்கவும் துணைவேந்தர் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊழல் செய்தவர் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் புதிய சட்டத்தின் மூலம் அரசுக்கு வழங்கப்பட்டிருக்கும் போதிலும் அதைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாப்பது ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்தச் சிக்கலில் தமிழக அரசு இனியும் அமைதியாக இருக்காமல், உதவி பேராசிரியர் வைத்திய நாதனின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்; அத்துடன் துணைவேந்தர் ஜெகநாதன் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் இராமதாசு கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com