கருணாநிதிக்காக விவசாயித் தலைவர் சிலையை அப்புறப்படுத்துவதா?

நாராயணசாமி சிலை, பெரம்பலூர்
நாராயணசாமி சிலை, பெரம்பலூர்
Published on

பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகளின் சங்கத்தில் தீவிரமான தலைவராகச் செயல்பட்ட சி.நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அவருக்கு வணக்கங்களையும், மரியாதையும் செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள இராமதாசு, ”உழவர்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்களையும், தியாகங்களையும் இந்த நாளின் உழவர்கள் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

”நாராயணசாமி நாயுடுவின்  பெருமைகள் நினைவு கூறப்பட வேண்டிய இந்த காலக்கட்டத்தில் பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருக்கும்  அவரது திருவுருவச் சிலையை இடமாற்றம் செய்ய  பெரம்பலூர் நகராட்சி முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.  நகராட்சியின் இந்த முடிவு உழவர் பெருந்தலைவருக்கு இழைக்கப்படும் பெரும் அவமதிப்பு ஆகும்.” என்றும் கூறியுள்ளார்.

”உழவர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தரவும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாராயணசாமி நாயுடு அவர்கள் ஆற்றிய பணிகள் அனைவரும் அறிய வேண்டிய வரலாறு ஆகும். 1970-களில் தந்தை, மனைவி ஆகியோரை அடுத்தடுத்து இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாடிய போதும், அதை பொருட்படுத்தாமல் விவசாயத்துக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்.
 
உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் பொருட்களுக்கு அடிப்படை விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும், வேளாண்மையைத் தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாராயணசாமி நாயுடு போராடியதன் பயனாகவே தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்களில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடைத்தது. ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உழவர் சங்கங்கள் ஏற்படுத்தப்படுவதற்கும் நாராயணசாமி நாயுடு அவர்கள் தான் காரணமாக இருந்தார்.

நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு  மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே 2019-ஆம் ஆண்டு இதே நாளில் அவருக்கு  கோயம்புத்தூர் மாவட்டம், வையம்பாளையத்தில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. நாராயணசாமி நாயுடு அவர்களின் புகழை மேலும், மேலும் பரப்ப வேண்டிய காலத்தில் அவரது சிலையை அகற்றி வேறிடத்தில் வைக்க முயல்வது நியாயமல்ல. இந்த முயற்சியை பெரம்பலூர் நகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதிக்காகவா...?- சீமான் கண்டனம்

பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் நுழைவு வாயிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா நாராயணசாமி நாயுடுவின் திருவுருவச் சிலையை பொய்க் காரணங்களைக் கூறி அகற்றிவிட்டு, அதே இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நிறுவ திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.” என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

”உழவர்கள் தனித்திருந்தால் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்பதை உணர்ந்து, வேளாண் பெருங்குடி மக்களை ஒன்றிணைத்து உழவர் இயக்கங்களை கட்டமைத்த பெருமகன் ஐயா நாராயணசாமி அவர்கள். அவரது அயராத முயற்சியால் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகாவில் பேராசிரியர் நஞ்சுண்ட சாமி தலைமையிலும், ஆந்திராவில் சங்கர் ரெட்டி தலைமையிலும், மராட்டியத்தில் சரத் ஜோசி தலைமையிலும், உத்தரப்பிரதேசத்தில் மகேந்திர சிங் திகாயத் தலைமையிலும் மாநில உழவர் இயக்கங்கள் உருவாகின. வேளாண்மைக்கு இலவச மின்சாரம், வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் உரிமைப்போராட்டங்களை முன்னின்று நடத்தி, அதற்காக சிறை தண்டனையும் பெற்றஐயா நாராயணசாமி அவர்கள்,உழவினை ஒரு தொழிலாக அரசு அறிவிக்க வேண்டுமென்றும் கனவு கண்டவர்.

அத்தகைய பெருமைக்குரிய ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச்சிலையை ஆளும் கட்சியின் அழுத்தத்தால் பெரம்பலூர் பேருந்து நிலைய வாயிலிருந்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் ஐயா கருணாநிதி அவர்களின் சிலையை அமைத்திட முயல்வது அப்பட்டமான அடையாள அழிப்பாகும்.” என்றும் சீமான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com