கலாஷேத்ரா பாலியல் புகார் : கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

கலாஷேத்ரா பாலியல் புகார் : கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி கவின் கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.புகாரின் அடிப்படையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை அளித்தது.

இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறி, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 30-ம் தேதி ஹைதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், இன்று அதிகாலை சென்னை திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலாஷேத்ரா மாணவிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் புகாரில் சிக்கிய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com