அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது முக்கியமானது.
குறிப்பாக, அருகில் உள்ள கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரியை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தினார். சீனத்திலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூட்டினார்.
டிரம்பின் இந்த அறிவிப்புகளால் பங்குச்சந்தையில் மாற்றங்களும் தங்கத்தின் விலை அதிகரிப்பும் தொடர்ந்துவருகின்றன. இந்நிலையில், சீன அரசாங்கம் அமெரிக்க முடிவுக்குப் பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு 15 சதவீதமும், எண்ணெய்க்கும் வேளாண் கருவிகளுக்கு 10 சதவீதமும் வரியை உயர்த்தி சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் பிரபல கூகுள் நிறுவனம் விதிகளை மீறிவிட்டதாக அதன் மீது விசாரணை நடத்தப்படும் என சீன சந்தை ஒழுங்குமுறை அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.