தலித் முதியவர் வன்கொடுமைக் கொலை- கண்டனம்

தலித் முதியவர் வன்கொடுமைக் கொலை- கண்டனம்
Published on

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருமலைக்கோட்டை கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த முதியவர் அருணாச்சலம் சாதி ஆதிக்க வெறிச் செயலால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பட்டியல் சமூக முதியவர் 62 வயதான அருணாச்சலம் அதே ஊரைச் சேர்ந்த விவேக் என்கிற இளைஞனால் சாராய பாட்டிலால் கழுத்திலும் உடலிலும் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஊர் மக்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னணியில் குற்றவாளி நள்ளிரவே கைது செய்யப்பட்டுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

”இத்தகைய வன்செயல்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவது கவலையளிக்கிறது. அரசு இயந்திரமும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீண்டாமை கொடுமைகளும், வன்செயல்களும் அதிகமாக நடந்தேறுகிற பகுதிகளை அடையாளம் கண்டு பட்டியல் சாதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.” என்றும் அவர் மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாடு அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் தீருதவியை தாமதமின்றி வழங்கிட வேண்டும். அரசு வேலையை அருணாச்சலம் மகன் மணிகண்டனுக்கு விரைந்து வழங்கவேண்டும். இதுபோன்ற வன்செயல்களுக்கும், சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட்ட அமைப்புகளின் போராட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரும், காவல்துறை துணை கண்காணிப்பாளரும் அளித்த உறுதிமொழிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com