உயர்நீதிமன்றத்தின் கருத்துப்படி தமிழகத்தில் திருநங்கையர் உட்பட்ட திருநர்கள், எல்ஜிபிடிகியூ எனப்படும் பால்புதுமையர்கள் ஆகியோர் நலனுக்கு தனித்தனியாக கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “ தமிழ்நாட்டில் திருநர் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர் கொள்கை தொடர்பாக உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், தனித்தனி கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருநர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்த முக்கியமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டுமென சிபிஐ(எம்) கேட்டுக்கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”எல்.ஜி.பி.டி.கியூ.ஐ.ஏ+ எனப்படும் வெவ்வேறு பாலின அடையாளத்தவர் ஒரே குழுவாக குறிப்பிடப்பட்டாலும் கூட, திருநர் என்போர் தம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒதுக்குதல்களும், துன்புறுத்தல்களும் சில குறிப்பான கொள்கை தலையீட்டின் மூலம் மாற்றியமைக்க தேவையுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது திருநங்கையர்களின் பிரச்னை என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இந்த பிரிவினருக்கென்று தனிக்கொள்கை உருவாக்க வேண்டுமென மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே, திருநர்களுக்கு என முதன் முதலில் கொள்கைகளை உருவாக்கியது கேரள இடதுசாரி அரசு என்பதும், திருநங்கையரின் கோரிக்கை அடிப்படையில், 2008ல் தமிழ்நாடு திருநங்கையர் நலவாரியத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு என்பதும் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று.
திருநருக்கு நிகழ்ந்துவரும் சமூக ஒதுக்குதல்கள் காரணமாக யாசித்தல், பாலியல் சுரண்டல் போன்ற அவலங்களுக்குள் தள்ளப்படுவதை தடுக்க, இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்யும் விதத்தில் திருநர்களுக்கான தனிக்கொள்கையை உருவாக்க வேண்டும்.”என்றும் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
முன்னதாக, பா.ம.க. மக்களவைத் தேர்தல் வேட்பாளர் சௌமியா அன்புமணி சில நாள்களுக்கு முன்னர் முதலமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், அவர் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.