தொகுதி மறுவரையறையைக் காரணமாகக் கூறி தள்ளிப்போடாமல் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
உலக உழைக்கும் மகளிர் நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமே ஒரு சிறந்த தேசத்தைக் கட்டமைக்க முடியும். மகளிர் தினமான இன்று, இந்தக் கருத்தைச் ”செயலாக்க நாம் இன்னும் வலுவாக உறுதியேற்க வேண்டும்”. நாடு முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதில் பெண்களின் தலைமைப்பண்பும் ,வலிமையும், தொலைநோக்குப் பார்வையும் முக்கியப் பங்காற்றும். ஆட்சி நிர்வாகத்தில் சமவாய்ப்பு அளிப்பதன் மூலமே, மக்கள்தொகையில் பாதியாக விளங்கும் பெண்களின் திறனை நாம் வெளிக்கொணர முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தொகுதி மறுவரையறை என்பது தேசிய அளவில் நீண்ட விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய விவகாரம் என்பதாலும், முறையாகச் செய்யாவிட்டால் அது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையையே பாதிப்புக்குள்ளாக்கிவிடும் என்பதாலும், பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டத்தை தொகுதி மறுவரையோடு இணைக்காமல் தனியாகவே, செயல்படுத்த வேண்டும் என்று இந்தியாவின் ஒட்டுமொத்தப் பெண்கள் சார்பாக வலியுறுத்துகிறேன். இதனைச் செயல்படுத்திடும் பொருட்டு,பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது முதலே நான் கோரி வருவது போல், அரசியலமைப்பு (நூற்று ஆறாவது திருத்தம்) சட்டத்தை திருத்துமாறு ஒன்றிய அரசை மீண்டுமொருமுறை வலியுறுத்துகிறேன்.” என்றும் கமல் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.