மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிற்பகலில் சந்தித்துப் பேசினார். அப்போது, அரசியல், திரைப்படம் உட்பட பலவற்றைப் பேசியுள்ளனர்.
கமலின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு முக்கால் மணி நேரம் நீடித்தது.
இச்சந்திப்பு குறித்து தன் சமூக ஊடகப் பக்கங்களில் உதயநிதி பதிவிட்டதில், “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி Kamal Haasan சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, கமலும் தனது சமூக ஊடகப் பக்கங்களில், “நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக இந்தச் சந்திப்பு அமைந்தது.” என்று மிகவும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உதயநிதியின் அன்பிற்கும் பண்பிற்கும் நன்றி என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் சேகர்பாபு, நேற்று கமலைச் சந்தித்திருந்தார். சட்டப்பேரவைத் தேர்தலின்போது கமலுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி, விரைவில் வரவுள்ள தமிழ்நாட்டு மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. அணியின் சார்பில் கமலுக்கு ஓர் இடம் அளிக்கப்படும் என்பதால், அதையொட்டி இந்தச் சந்திப்புகளில் பேசப்பட்டது என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.