ப.சி. தந்த ரூ.12 கோடி - அழகப்பா பல்கலை. நூலகம்!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் நூலகத்தைத் திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் நூலகத்தைத் திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
Published on

முன்னாள் பாதுகாப்பு, நிதியமைச்சர் ப. சிதம்பரம் நன்கொடையாக வழங்கிய 12 கோடி ரூபாய் செலவில் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் வளர்தமிழ் எனும் பெயரில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதைத் திறந்துவைத்தார். 

ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலைவகித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம் தன் சொந்த நிதியில் 12 கோடி ரூபாய் செலவில், அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பில் 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலை ஆகியவற்றைத் திறந்துவைத்தார்.

திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம் செட்டிநாடு கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும்வகையில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், கீழ்த் தளம், தரைத் தளம், முதல் மாடியுடன் கட்டப்பட்டுள்ளது.

கீழ்த் தளத்தில் கம்பர் நூலக அறை, தொல்காப்பியர் அரங்கமும், முதல் தளத்தில் திருவள்ளுவர், இளங்கோவடிகள் நூலக அறைகளும் இணையதள வசதியுடன் கூடிய மின் நூலகம், சிறு கூட்டரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.

நூலகத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களை வைப்பதற்கான இடம் உள்ளது.

கலையரங்கக் கருத்தரங்கக் கூடத்திற்கு “வீறுகவியரசர் முடியரசனார் அரங்கம்” என்று பெயர் சூட்டப்பட்டது.  

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தேசியக் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு நூலை முதலமைச்சர் வெளியிட, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க. ரவி பெற்றுக்கொண்டார்.

உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன், மூத்த அமைச்சர்கள் நேரு, எஸ். ரகுபதி, கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், மு.பெ. சாமிநாதன், சிவ.வீ. மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாங்குடி, தமிழரசி, டாக்டர் வி. முத்துராஜா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் அ. செந்தில்ராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com