தமிழ், மலையாளத் திரையுலகின் தலைசிறந்த பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் கேரளத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. அவரின் மறைவுக்கு இரசிகர்களும் பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
”காலனி ஆட்சிக் காலத்தில் இருந்த கொச்சி சமஸ்தானத்தின் ரவிபுரம் என்ற ஊரில், நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஜெயச்சந்திரன் திரை இசை பின்னணி பாடகர்களில் தனித்துவம் பெற்று விளங்கியவர்.
தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்து, இன்றும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. மலையாள திரைப்படங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர்.
கடந்த 1958 ஆம் ஆண்டில் பாடகர் கே.ஜே.ஜேசுதாசன் இளைஞர் விழாவில் பங்கேற்று பாடி, பாராட்டுதல்களை பெற்ற ஜெயச்சந்திரன் தேசிய அளவில் சிறந்த பாடகர் என்ற விருது பெற்ற ஜெயச்சந்திரன், கேரள அரசின் விருதுகள் ஐந்து முறையும், தமிழ்நாடு அரசிடம் இரண்டு முறை விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர்.
சேர்ந்திசை மேதை கலைஞர் எம்.பி.சீனிவாசன் குழுவில் இணைந்து செயல்பட்டவர். முன்னணி இசை அமைப்பாளர் அனைவரது இசையிலும் பாடல்கள் பாடிய பெருமைக்குரியவர்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.” என்று அக்கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.