மத்திய அரசு கொண்டுவந்த நான்கு புதிய சட்டத்தொகுப்புகளை இரத்துசெய்ய வேண்டும் என்பது உட்பட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 25ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுதில்லியில் இன்று பத்து மைய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டுப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்ஈடபிள்யூஏ, ஏஐசிசிடியு, யுடியுசி, தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்- எல்பிஎஃப் ஆகிய சங்கங்களின் தலைவர்கள் பேசினர்.
அகில இந்திய பொது வேலைநிறுத்தத்துக்கான தயாரிப்புப் பணிகளைத் தொடங்குவது, ஆலைகளிலும் தொழில்நிறுவனங்களிலும் வாயில் கூட்டங்களை நடத்துவது, பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்வது ஆகியவை தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக, மே 3 ஆம் தேதியன்று வேலைநிறுத்த முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கவேண்டும் என்றும் அதற்கான தயாரிப்புப் பணிகள் குறித்தும் அகில இந்தியத் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.