வதந்தியால் தர்பூசணி விற்பனை சரிந்தது!

தர்பூசணி
தர்பூசணி
Published on

தர்பூசணி பழங்கள் குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது; இதனால், தர்பூசணி விற்பனை பெருமளவில் குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


”தர்பூசணி பழங்கள் இயல்பாக இளஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும்  என்றும்,  இராசாயனம் கலந்த தர்பூசணி தான் அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர்  வெளியிட்ட விழிப்புணர்வு காணொலி தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இதைத் தொடர்ந்து தர்பூசணி பழங்கங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால் அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டது. சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப் பட்ட தர்பூசணி பழங்களை இப்போது ரூ.3 ஆயிரத்திற்குக் கூட வாங்குவதற்கு எவரும் முன்வருவதில்லை.

தமிழ்நாடு முழுவதும் 80 ஆயிரத்திற்கும் கூடுதலான பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் இன்னும் அறுவடை செய்யப்படவில்லை. தர்பூசணி பழங்கள் குறித்த மக்களின் அச்சம் விலகி, அதன் விற்பனை அதிகரிக்காத பட்சத்தில் அனைத்து உழவர்களும் தாங்க முடியாத இழப்பைச் சந்திக்க நேரிடும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இன்றைய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

”தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யும்போது மட்டும்தான் இளஞ்சிவப்பாக இருக்கும். அறுவடை செய்யப்பட்டு 5 நாள்களுக்குப் பிறகு அடர்சிவப்பாக மாறிவிடும்.  அறுவடை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் சந்தைக்கு வருவதற்கு குறைந்தது 3 நாட்கள் ஆகி விடும். அதன்பின் பொதுமக்கள் தர்பூசணியை வீட்டுக்கு வாங்கி வந்து சாப்பிடும் போது அடர்சிவப்பாகத்தான் இருக்கும். இதுதான் தர்பூசணியின் இயல்பு. இதில் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஆனால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அடர்சிவப்பு நிறத்தில் உள்ள தர்பூசணி பழங்கள் அனைத்துமே இரசாயனம் கலக்கப்பட்டவை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டு விட்டது. அதனால், தர்பூசணி வணிகம் குறைந்து விட்டது. இந்த எண்ணத்தைப் போக்க ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

தர்பூசணித் தோட்டங்களுக்கு சென்ற தோட்டக்கலை அதிகாரிகள், அங்குள்ள பழங்களை ஆய்வு செய்து அவை தரமானவை என்றும், அடர்சிவப்பு நிறத்தில் இருந்தாலும் அச்சமின்றி உண்ணலாம் என்றும் விளக்கமளித்துள்ளனர். டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்  தர்ப்பூசணி பழங்களில் நிறமிகளை ஊசி மூலம் செலுத்துவது சாத்தியமற்றது என்று கூறியுள்ளனர்.

தொடக்கத்தில் காணொலி வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியும்,‘‘விவசாய நிலங்களில் 99.9% தவறு நடப்பதில்லை. யாரோ சிலர் மட்டும் தான் தவறு செய்துள்ளனர். இரசாயனம் கலந்த தர்பூசணி எங்கும் விற்பனை செய்யப்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தும் கூட  மக்களிடம்  ஏற்பட்ட அச்சம் விலகவில்லை.” என விவரித்துள்ள அன்புமணி,

”எனவே, தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில்,  தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் தமிழக அரசு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் தர்பூசணி உழவர்களை பேரிழப்பிலிருந்து காக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com